அப்பாவி மக்களிடம் தொடர்ந்து அதிகார ஆணவத்தைப் பிரயோகிக்கும் திமுக அரசு நிச்சயம் வீழும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுக கொடுத்த வாக்குறுதியின் படி தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 14 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களைக் கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி தாக்கி அவர்களைத் தடாலடியாக அப்புறப்படுத்தியது ஆளும் அறிவாலய
அரசு என தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும் ஏவல்துறை அடித்துத் துன்புறுத்தியதைத் தமிழகம் இன்னும் மறக்கவில்லை. இருந்தாலும் மனம் தளராது தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தை மீண்டும் அறவழியில் தொடர்வது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை சிந்தாதிரிப்பேட்டை உழைப்பாளர் தினப் பூங்காவில் கூடிய தூய்மைப் பணியாளர்களின் மீது திமுக அரசு மீண்டும் அடக்குமுறையை ஏவி அவர்களைக் கைது செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற ஊடக நண்பர்களையும் சட்டத்திற்குப் புறம்பாக தரக்குறைவாக நடத்தியதோடு, இதுகுறித்து புகார் அளிக்கச் சென்றதால் கைது செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளது.
ஆளும் அரசின் இந்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்களுக்கு எதிராக எழும் போராட்டக் குரல்களைக் கண்டு திமுக அரசுக்கு அத்தனை பயமிருந்தால், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டுப் போக வேண்டியது தானே?
அதைவிட்டு விட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்குவதற்கு அரசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இதுதான் திமுகவின் சமூகநீதியின் லட்சணமா? ஆளும் அரசு தனது அராஜகப் போக்கால் அழிவை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது! அனைத்திற்கும் கூடிய விரைவில் முடிவு கட்டப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.