ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே விண்வெளி நகரம் அமைக்கப்பட்டு அங்கிருந்து தனியார் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அம்மாநிலத்தின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான கொள்கைகளை அறிவித்தார். அப்போது பேசிய அவர், லேபாக்ஷி மற்றும் திருப்பதியில் இரண்டு விண்வெளி நகரங்கள் அமைக்கப்படும் எனவும், திருப்பதியில் தனியார் செயற்கைக்கோள்கள் தயாரித்து ஏவும் வகையில் கட்டமைக்கப்படும் எனவும் கூறினார்.
அமெரிக்காவில் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளது போல், ஆந்திராவின் விண்வெளி நகரில் இருந்து தனியார் செயற்கைக்கோள்கள் ஏவப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
அமராவதியில் வரும் 1ம் தேதி முதல் குவாண்டம் கம்ப்யூட்டர் செயல்பட துவங்கும் என கூறிய சந்திரபாபு நாயுடு, தகவல் தொழில்நுட்பத்துறையில் கடந்த ஆண்டு 88 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதால் விசாகப்பட்டினம் மிகப்பெரிய தகவல் மையமாக மாறும் எனவும் தெரிவித்தார்.