அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தெருவுக்குத் தெரு தங்களின் பிரச்சார பீரங்கிகளை இறக்கிவிட்ட அறிவாலயம் , ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், ஆட்சி முடியப்போகும் இறுதி மாதங்களிலும் ஆளும் அரசு அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும்.
ஏழை மக்களை இப்படி ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? அப்படியென்ன பதவி மோகம் அவர்களுக்கு? என்பது தான் அனைத்து தரப்பினரின் ஒரே ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிப் பதவி கூட கிடைக்காது! பாதிக்கப்பட்ட பொதுஜனம் அதை ஒருபோதும் அனுமதிக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.