நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேபாள நாட்டில் உள்ள அனைத்துச் சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவைப் பின்பற்றாத 26 சமூக ஊடகங்களை நேபாள அரசு முடக்கி நடவடிக்கை எடுத்தது. அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பெரும் போராட்டம் வெடித்தது.
இந்தப் போராட்டத்திற்கு மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் நேபாள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதித்த தடையை நேபாள அரசு திரும்பப்பெற்றது. இருப்பினும் நீடித்த வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு படையினரும் காயமடைந்தனர்.
கட்டுக்கடங்காத இந்த வன்முறையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இல்லங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேபாள நாட்டின் நிதித்துறை அமைச்சரை போராட்டக்காரர்கள் தாக்கினர். மேலும் நேபாள பிரதமர் சர்மா ஒலியின் இல்லம் சூறையாடப்பட்டுத் தீ வைத்து எரிக்கப்பட்டது.
நிலைமை எல்லை மீறி சென்றதை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம் சந்திரப் பவுடல், பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் ராஜினாமா செய்து விட, அங்கு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நேபாள ஊடக நிறுவனமான காந்திபூர் டிவியின் தலைமையகத்துக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
இதனால் காந்திபூர் டிவியின் தலைமையகம் கொளுந்து விட்டு எரிந்ததால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதுகுறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.