ஆப்கானிஸ்தானை சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டெல்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் காம் ஏர் விமானம் காபூலில் உள்ள ஹமித் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அப்போது ஒரு சிறுவன் செய்த வேலை விமான நிலைய அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 13 வயது ஆப்கானிஸ்தான் சிறுவன் டெல்லி வந்தது தெரியவந்தது.
விமான நிலையத்தில் பாதுகாப்பை மீறி யாருக்கும் தெரியாமல் நுழைந்த சிறுவன், ஒரு ஆர்வத்தில் இப்படிச் செய்துவிட்டதாக கூறியதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குண்டுஸ் நகரைச் சேர்ந்த அந்தச் சிறுவன் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டான்.
உரிய விசாரணைக்குப் பின்னர் அந்தச் சிறுவன் டெல்லியில் இருந்து புறப்பட்ட அதே விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.