ஆயுத பூஜையை முன்னிட்டு சேலம் அருகே பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
நவராத்திரி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 1ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையும் அதற்கு அடுத்த நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக ஆயுதபூஜை பண்டிகையில் பொரி முக்கிய பங்கு வகிப்பது வழக்கம்.
அதற்காகச் சேலம் அருகே பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் பொரி உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமாண்டபட்டியில் எந்திரத்தை பயன்படுத்தாது தொழிலாளர்களே அடுப்பின் மூலம் பொரியினை தயார் செய்கின்றனர்.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொரியினை வாங்குவதற்கான ஆர்டர்கள் குவிந்ததால், 24 மணி நேரமும் பொரி உற்பத்தி நடைபெற்று வருகிறது. மணம், சுவை மாறாமல் இருக்க பொரி உற்பத்தியாளர்கள் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து கார் நெல்லை வாங்கி வந்து உரிய முறையில் பக்குவப்படுத்திப் பொரியாகத் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
இதன் காரணமாக ஆயுத பூஜைக்கு இன்னும் ஒரு வாரமுள்ள நிலையில் தற்போதே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் பொரி விற்பனைக்குச் செல்வது அதிகரித்துள்ளது.
ஆயுத பூஜையை ஒட்டிப் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் பொரியை பலரும் வாங்கிச் செல்லும் நிலையில், தொழிலாளர்களும் ஊழியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
















