மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவர் பெரிதும் ஊக்குவித்த சுதேசி கொள்கையை பின்பற்றும் விதமாக, சென்னை அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள ‘காதி பவன்’ சென்று, காதி பொருட்கள் வாங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தேசத்தின் உள்நாட்டு உற்பத்தித் திறனை பெருக்குவதற்கும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களின் ‘சுயசார்பு’ திட்டம் எனும் லட்சியத்தை ஊக்குவிக்கும் வகையிலும், அனைவரும் காதி பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்க வேண்டும் என்று இந்நன்னாளில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இதேபோல், அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில் பிரதமர் சுதந்திர தின உரையின் போது ‘தீபாவளி பரிசாக’ நாட்டு மக்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிப்படி, ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடவடிக்கை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனை அங்காடிக்கு நேரில் சென்று, விளையாட்டுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி-யானது, 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.