வியட்நாமில் புவாலோய் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.
வியட்நாமை புவலாய் சூறாவளி தாக்கி ஒரு வாரத்தை நெருங்கும் சூழலில், பல இடங்களில் வெள்ளம் வடியாமல் காணப்படுகிறது. புவலாய் சூறாவளி கரையை கடந்தபோது 26 அடி உயரத்திற்கு கடல் அலை எழுந்தது. பலத்த காற்று வீசிக் கனமழை பெய்தது.
இதனால் நகர் முழுவதும் வெள்ளக்காடானது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி ஏரி போல் காட்சியளித்தது. தற்காலிக பாலங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது வரை பல இடங்களில் மின்சாரமின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
ஐம்பதிற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில், தான் ஹோவா மாகாணத்தில் வெள்ளநீர் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.