ஆந்திராவில் முறையான உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோனசீமா மாவட்டத்தில் உள்ள பானா சஞ்சா பட்டாசு தொழிற்சாலை முறையான உரிமம் பெற்று இயங்கி வருகிறது.
இந்தப் பட்டாசு ஆலையில் திடீரெனத் தீப்பற்றி பெரும் விபத்து ஏற்பட்டது. பட்டாசுகளை முறையாகக் கையாளாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஆறு தொழிலாளர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கோர விபத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்ததுடன், நிவாரண மற்றும் மருத்துவ உதவி குறித்தும் ஆலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று நிவாரண உதவிகள் வழங்கும்படி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.