தவெக தலைவர் விஜய் கரூர் செல்ல அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மாவட்ட எஸ்.பி.யை அணுகலாம் என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கரூர் செல்வதற்கு அனுமதி மற்றும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் டிஜிபி அலுவலகத்திற்கு இ-மெயில் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு டிஜிபி அலுவலகம் பதில் மெயில் அனுப்பியுள்ளது.
அதில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தொடர்பாக தவெக சார்பில் ஒரு பிரதிநிதியை நியமித்து கரூர் மாவட்ட எஸ்.பி.யை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி தொடர்பான தேதி, நேரம், இடம், வரும் வழி மற்றும் நிகழ்ச்சி நிரல் போன்ற விவரங்களை கரூர் மாவட்ட காவல்துறைக்கு சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை காவல்துறைக்கு அளிக்கப்பட்டவுடன் தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.