சீர்காழி அருகே நெம்மேலியில் நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆரம்ப சுகாதார நிலையம் அந்த இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததாகவும், அது சேதமடைந்ததால் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீர்நிலைகளில் செயல்பட்டு வரும் ஆறு அரசு அலுவலகங்களையும் வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன், அரசுக்கு ஏற்பட்ட நிதி இழப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை பிறப்பிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.