நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய நபர்களான திருவேங்கடம் மற்றும் நாகேந்திரன் ஆகியோர் அடுத்தடுத்து மரணித்துள்ள நிலையில், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றவே கூடாது என மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மல்லுக் கட்டியது திமுக அரசு என தெரிவித்துள்ளார்.
ஆனால், மாண்பமை உச்சநீதிமன்றமோ சிபிஐ விசாரணைக்கு பச்சைக் கொடி காண்பித்து ஆளும் அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்துவிட்டது – சபாஷ்! மேலும், எம்பெருமான் முருகனின் முதற்படைவீடான திருப்பரங்குன்றம் மலையின் நிறத்தை மாற்றுவதற்கு முரண்டு பிடித்தவர்களைக் கண்டிக்காமல், கைகட்டி வேடிக்கை பார்த்தது இந்த மதம் பிடித்த திமுக அரசு. ஆனால், மாண்பமை மதுரை உயர்நீதிமன்றமோ “திருப்பரங்குன்ற மலை என்ற இயற்பெயரே இனி தொடரும், அங்கே ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிடக் கூடாது” என்றொரு தீர்ப்பை வழங்கி, குன்றம் முழுதும் குமரனுக்கே சொந்தம், என்பதை உறுதிப்படுத்திவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிளவுவாத அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் திமுகவிற்கு இந்நேரம் இரத்த அழுத்தம் எகிறியிருக்கும் – சபாஷ்! அடுத்ததாக, நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த சிறுநீரகத் திருட்டுகள் குறித்து இதுவரை ஒரு FIR -ஐ கூடப் பதிவு செய்யாத ஆளும் அரசின் அலட்சியத்திற்கு குட்டு வைக்கும் வகையில், இவ்விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம்.
ஆனால், திமுக அரசோ எங்கள் ஆட்சியில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க நாங்களே தான் அதிகாரிகளை நியமிப்போம் என மண்டையைத் தேய்த்துக் கொண்டே மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு சென்று அடம் பிடித்தது. ஆனால், மாண்பமை உச்சநீதிமன்றமோ “சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாங்கள் தலையிட மாட்டோம்” எனக் கூறி ஆளும் அரசுக்கு பெரிய குட்டு வைத்து அனுப்பிவிட்டது – சபாஷ்!
இறுதியாக, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வரம்பிற்கு கீழ் வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ஏன் அதை விசாரித்தது?” என்ற கிடுக்கிப்பிடி கேள்வியால் தமிழக அரசை சுற்றி வளைத்துள்ளது மாண்பமை உச்சநீதிமன்றம். கரூரில் நிகழ்ந்த துர்மரணங்களின் கறைகளைத் தங்கள் கரங்களிலிருந்து கழுவி விடுவதற்காக எதிர்தரப்பினரை குற்றவாளி கூண்டில் நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசோ இதற்கு பதில் சொல்லத் தெரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருக்கிறது – சபாஷ்! என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து சட்டத்தின் சவுக்கடிகளால் சல்லி சல்லியாக நொறுங்கிப் போய் கிடக்கும் கழகக் கண்மணிகளே இதயத்தை இரும்பாக்கிக் கொள்ளுங்கள்! “மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமெதற்கு?” “சிபிஐ விசாரணையைக் கண்டு இத்தனை பதற்றமெதற்கு?” “தொட்டதெற்கெல்லாம் நீதிமன்றங்களை நாடி மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவது ஏன்?” போன்ற மக்களின் பல கேள்விக் கணைகள் இனி உங்களை விடாது துளைக்கப்போகின்றன என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.