ஆஸ்திரேலியாவில் பெண் காவலர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்துக் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேட் ஹென்டர்சன் என்பவர் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என எண்ணிய ஜேட் ஹென்டர்சன், புல் அப்ஸ் உலக சாதனையை முறியடிக்க எண்ணியுள்ளார்.
இதற்காக 24 மணி நேரத்தில் 7,079 புல் அப்ஸ்கள் எனும் உலக சாதனையை முறியடிக்கத் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதன்படி அவர் 3500 புல் அப்ஸ்களை செய்து கொண்டிருந்தபோதே தசை நார் கிழிந்து பாதிக்கப்பட்டார்.
இருப்பினும், சாதனையை கைவிட மனமில்லாத ஜேட் ஹென்டர்சன், தனது இலக்கை 24 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக மாற்றிக் கொண்டார்.
அதன்படி சுமார் 6 வார ஓய்வுக்கு பிறகு களமிறங்கிய ஜேட் ஹென்டர்சன், ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்துக் கின்னஸ் உலக சாதனையை படைத்தார்.
முன்னதாக ஒரு மணி நேரத்தில் 725 புல் அப்ஸ்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஜேட் ஹென்டர்சன் 10 வருட முந்தைய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.