வட இந்தியாவில் இருமல் மருந்து அருந்திய 21 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகச் சென்னையில் மருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்தியப்பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதேபோல, ராஜஸ்தானிலும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள், சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்ததை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகள் குடித்த கோல்ட்ரிப் இருமல் மருந்தில் நச்சுத் தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோல்ட்ரிப் மருந்தைத் தயாரித்த ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. மருந்துத் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அமலாத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு மருந்து ஆய்வாளர் தீபா ஜோசப் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணா நகரில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குநர் கார்த்திகேயன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.