பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” என்ற நமது வேள்விப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தின் தாம்பரம் பகுதிக்குச் சென்றிருந்தேன்.
தாம்பரத்திற்குப் பல பெருமைகள் இருந்தாலும் திமுக ஆட்சியில் தாம்பரம் என்றவுடன் நமது நினைவிற்கு வருவது, கடந்த ஆண்டில் தாம்பரம் மாநகராட்சி வழங்கிய கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து 3 அப்பாவி பொதுமக்கள் மாண்டு போன துயரம் தான்.
விண்ணப்பம் கொடுத்த 15 நாட்களில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வோம் எனப் பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த அறிவாலய அரசு கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றாதது மட்டுமன்றி, மக்களின் அடிப்படைத் தேவையிலும் அலட்சியத்தைக் காட்டி அவர்களின் உயிரைக் குடித்துக் கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
மழை வந்தால் வெள்ளத்தில் மிதப்பதும், மழை நின்றவுடன் குடிநீருக்கு அல்லாடுவதுமே தாம்பரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல ஊர்களின் அவலநிலையாகிவிட்டது, இப்படிப்பட்ட அலங்கோல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் அறிவாலயத்திற்கு, அடுத்தமுறை அரியணை என்பது எட்டாக்கனி தான் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.