தமிழகத்தில் ஆயிரத்து 540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14 ஆயிரத்து 808 கோடி ரூபாய் செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தெரிவித்துள்ளது.
2023 – 24ம் நிதி ஆண்டுக்கான, மாநில அரசின் நிதி நிலை மீதான கணக்கு தணிக்கை அறிக்கை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், ‘காலை உணவு திட்டம்’ போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையின் அறிவிப்புகளான, ”பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்”, ”எண்ணும் எழுத்தும்”, ”நான் முதல்வன்” போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
”தமிழக உலக புத்தாக்கம் மற்றும் திறன் பயிற்சி மையம்” என்ற திட்டம், 120 கோடி ரூபாயில் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கு ஒதுக்கப்பட்ட, 20 கோடி ரூபாயில், எந்த செலவும் செய்யாமல், முழுமையாக அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆயிரத்து 540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 14 ஆயிரத்து 808 கோடி ரூபாய், செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.