ஜப்பான் வரலாற்றில் முதல் பெண் பிரதமராகச் சனேனே டகாய்ச்சி பொறுப்பேற்கவுள்ளார்.
ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்ததால், பிரதமர் ஷிகெரு இஷிபா தனது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் ஜப்பான் பிரதமராகத் தேர்வு ஆவதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 465 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், சனேனே டகாய்ச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தார். தொடர்ந்து ஜப்பான் நாட்டின் 104 ஆவது பிரதமராக அவர் பதவி ஏற்க இருக்கிறார்.
இதனிடையே அவருக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவும், ஜப்பானும் உருவாக்கியுள்ள ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கூட்டணியை, இணைந்து செயல்படுத்த ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை ஏற்படுத்துவதில் இந்திய – ஜப்பானிய நல்லுறவானது தவிர்க்க முடியாத ஒன்று என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.