தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய அரசு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், இரண்டு மாதத்திற்கு முன் தாம்பரம் அரசு மருத்துவமனையை நான் தான் தொடங்கி வைத்துவிட்டேனே என்று கூற விளையாதீர்கள். ஆட்சி முடியும் தருவாயில், ₹110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தப்படும் அம்மருத்துவனையில் குடிநீர் வசதி, கழிவறை வசதி கூட இல்லை என்பது தான் நிதர்சனம் என அவர் தெரிவித்துள்ளார்.
சோழிங்கநல்லூர், மதுரவாயல் ஆகிய மற்ற இரண்டு பகுதிகளிலோ மருத்துவமனை கட்ட செங்கலைக் கூட திமுக அரசு நாட்டவில்லை. அதைச் செய்யவும் திமுக அரசுக்கு நாட்டமில்லை என்பதும் நிதர்சனம்.
கொடுத்த வாக்குறுதிப்படி அரசு மருத்துவமனைகளை உருவாக்காது, நான்கரை ஆண்டு காலமாக ஏழை மக்களின் உடல் நலனைக் கிடப்பில் போடுவது தான் உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா? என வினவியுள்ளார்.
வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்று விளம்பர உலகில் மட்டும் உழன்று வரும் அறிவாலய அரசின் அகங்காரம் மக்களின் கோபத்தீயில் சாம்பலாகும் நாள் வெகுதூரமில்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.
















