குவால்காம் மற்றும் மீடியாடெக் உள்ளிட்ட உலகின் முன்னணி சிப் தயாரிப்பாளர்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் உற்பத்தி மற்றும் சிப் பேக்கேஜிங் திறன்களைப் பயன்படுத்த இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த நூற்றாண்டில் உலக நாடுகளிடையே எண்ணெய்க்காகக் கடும் போட்டி நிலவியது. இந்த நூற்றாண்டில் அது செமிகண்டக்டர் சிப்களுக்கான போட்டியாக மாறி உள்ளது. கார்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் ரேடார் போன்ற மின்னணு கருவிகள் உட்பட நவீன காலத்துக்குத் தேவையான பல்வேறு பொருட்களின் உற்பத்திக்குச் சிப் அடிப்படையாக உள்ளது.
உலகளவில் 570 பில்லியன் டாலர் மதிப்பை சிப் உற்பத்தி சந்தை கொண்டு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் அதன் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலராக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் சிப்களுக்கான சந்தை மூன்று விதமாகப் பிரிக்கப்படுகிறது. டிசைனிங், உற்பத்தி மற்றும் அசம்பிளிங் ஆகிய மூன்றாக வகைப்படுத்தப்படுகிறது.
இதில் சிப் டிசைனிங் துறையில் அமெரிக்கா முதலிடத்திலும், தைவான் இரண்டாவது இடத்திலும் தென்கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களிலும் ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன. பெரும்பாலும் சிப் அசம்பிளிங்கை பொறுத்தவரை சீனா, தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன. புவிசார் சூழலில் பெரும்பாலான நாடுகள் சிப்களுக்கு தைவானையே பெரிது நம்பியுள்ளன.
ஒருவேளை தைவானை, சீனா கைப்பற்றும் நிலையில் அந்தச் சந்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில். செமிகண்டக்டர் துறையில் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளது. சிப்-களுக்காக எப்போதும் வெளிநாட்டு இறக்குமதியையே இந்தியா நம்பி இருந்தது. பிரதமர் மோடியின் சுயசார்பு என்ற தாரக மந்திரத்தின் வழியில், இந்தியாவில் தயாரிப்போம் உலகத்துக்கு வழங்குவோம் என்ற முழக்கத்துடன் சுயசார்பு பாரதம் வேகமாக முன்னேறி வருகிறது.
எதற்கும் எந்த நாட்டையும் சார்ந்து இல்லாமல், அனைத்து பொருட்களும் இந்தியாவிலேயே தயாரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு துறைகளிலும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. அதில் செமி கண்டக்டர் துறை முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகில் எங்குச் சிப் உருவாக்கினாலும் அதில் இந்தியாவின் செமி கண்டக்டர் தான் இருக்கப் போகிறது என்று உறுதியளித்தார்.
இதற்காகச் செமிகண்டக்டர் மிஷன் இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரத்யேக செமிகண்டக்டர் கொள்கையைக் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையைக் குஜராத் பெற்றது. தொடர்ந்து உத்தர பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் பிரத்யேக செமி கண்டக்டர் கொள்கைகளை கொண்டு வந்தன. உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை மற்றும் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கான வடிவமைப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை ஆகிய திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப் படுகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைப்பது, இந்தியாவில் டிஸ்ப்ளே ஆலைகளை அமைப்பது, இந்தியாவில் கம்பவுண்ட் செமிகண்டக்டர் மற்றும் ஏடிஎம்பி வசதிகளை அமைப்பது, ஆகியவை முக்கியமானதாகும். 76,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தியா செமிகண்டக்டர் மிஷன் திட்டத்தின் கீழ் ஆறு மாநிலங்களில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முன்மொழியப்பட்ட முதலீடுகளுடன் மொத்தம் 10 செமிகண்டக்டர் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன..
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 4,594 கோடி மதிப்புள்ள நான்கு புதிய செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட சிப் உற்பத்தி வசதிகளின் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. இவற்றில், மைக்ரான், CG செமி, அசாமில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் சிப் அசெம்பிளி ஆலை மற்றும் கெய்ன்ஸ் OSAT ஆலை ஆகியவை சேர்ந்து சுமார் 66,000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளன. உலக அளவில் முன்னணி சிப் நிறுவனங்களான குவால்காம் மற்றும் மீடியா டெக் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவில் வலிமையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தளங்களை வைத்துள்ள இந்த இரு நிறுவனங்களும், இந்தியாவிலேயே மூலப் பொருட்கள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதன் தொடக்கமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த செமிகண்டக்டர் மாநாட்டில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த விக்ரம் 32 என்ற சிப் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் சிப் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சிப் சந்தை மதிப்பு 2026ஆம் ஆண்டில் சுமார் 64 பில்லியன் டாலராக உயரும் என்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்றும், 2032ம் ஆண்டில் 100.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்றும் 2035ம் ஆண்டில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட’ 6G நெட்வொர்க்கை இந்தியா உருவாக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
















