88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அண்டை நாடுகளுடன் எவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தருவோம் என்றும் அவர் கூறினார்.
எப்போது எல்லாம் ஒரு நடவடிக்கை எடுக்கிறோமோ, அப்போது எல்லாம் அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்க அளவு குறைந்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இதுவரை 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறிய அவர், அதில் 61 சதவீதம் பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் குற்றம் சாட்டினார்.
எந்தவொரு போருக்கும் இந்தியா பதிலளிக்கத் தயாராக உள்ளதாகக் கூறிய அவர், 88 மணி நேர ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் டிரெய்லர் தான் என்றும் தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும், ஆதரவளிப்பவர்களுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் உபேந்திர திவேதி எச்சரிக்கை விடுத்தார்.
















