டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
டெல்லி செங்கோட்டை பகுதியில், கடந்த 10ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் , காரை ஓட்டி வந்த பயங்கரவாதியும் மருத்துவரமான உமர் நபி உள்ளிட்ட 14க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், உமர் நபியுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த ஜசிர் பிலால்வானி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், இஸ்ரேல் உடனான போரால் பலவீனமடைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஓராண்டாக பாகிஸ்தானில் அடைக்கலம் தேடி வந்ததாகவும், கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மாநாட்டில் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிலர் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாகவும், பவஹல்பூரில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்துக்குச் சென்ற ஹமாஸ் பயங்கரவாதிகள் ரகசிய திட்டங்களை வகுத்து தந்ததாகவும் கூறியுள்ளார்.
ஹமாஸ் பயங்கரவாதிகள் சந்தித்த சில வாரங்களுக்கு பின் பஹல்காமில் லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 2023ல் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதுபோல, பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாபர் மசூதி இடிப்பு தினமாக டிசம்பர் 6ஆம் தேதி ட்ரோன் மூலம் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் பயங்கரவாதிகள் திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
















