ராணுவ வலிமையை அதிகரிக்கும் விதமாக, உலகின் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல் ஹெலிகாப்டரான AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது. சீனா, பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தின் AH-64E அப்பாச்சி கார்டியன் தாக்குதல் ஹெலிகாப்டர் உலகின் மிகச் சக்திவாய்ந்த ஹெலிகாப்டராகக் கருதப்படுகிறது. 1984-ல் அமெரிக்க இராணுவச் சேவையில் நுழைந்த இந்த ஹெலிகாப்டரை வாங்குவதற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன. AH-64 Apache ஹெலிகாப்டர்களை அமெரிக்கா தவிர கிரீஸ், ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து, சிங்கப்பூர், சவூதி அரேபியா, எகிப்து, தைவான் உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன.
அமெரிக்காவின் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் இரண்டு சக்திவாய்ந்த Turboshaft என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர் அதிக சக்தி மற்றும் அதிக உயரத்தில் பறக்கும் திறன் கொண்டவையாகும். இது மிகவும் ஆபத்தான போர்ச் சூழல்களிலும் பறக்கவும் எதிரியின் இலக்குகளைத் தாக்கவும் உதவுகிறது. இருவர் அமர்ந்து செல்லும் வகையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஹெலிகாப்டரை இயக்கும் நேரத்தில் மற்றொருவர் ஆயுதங்களைப் பயன்படுத்தி இலக்கைத் தாக்கும் பணியில் ஈடுபடுவார். எதிரியின் கவச ராணுவ வாகனங்கள் மற்றும் பதுங்கு குழிகள் போன்ற கனரக தரை இலக்குகளை அழிப்பது இந்த ஹெலிகாப்டரின் முதன்மையான நோக்கமாகும். இதற்கு அதிக சக்தி வந்த FIRE POWER தேவை. அதற்காக, அப்பாச்சி ஹெலிகாப்டரில் Hellfire ஏவுகணை பயன்படுத்தப்படுகிறது.
தாக்க வேண்டிய இலக்கைக் கண்டறிவதற்குப் பயன்படும் சென்சார், இரவு நேரத்தில் துல்லியமான காட்சிகளைக் காண உதவும் தொலைநோக்கி போன்றவை ஹெலிகாப்டரின் முன்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. தரையிறங்கும் சக்கரங்களுக்கு நடுவே நவீனத் துப்பாக்கி, Hellfire ஏவுகணைகளைச் செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகள் ஆகியவை உள்ளன. மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அப்பாச்சி ஹெலிகாப்டர், தொடர்ந்து 1200 குண்டுகளைச் சுடும் வலிமை பெற்றது. பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் குறிபார்த்துச் சுடுவதற்குத் தேவையான காட்சிகளைக் காட்டும் தொலைநோக்கி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள ரேடார் ஒரே நேரத்தில் 128 தரை இலக்குகளைக் கண்காணிக்கவும், 16 இலக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும். நிலப்பரப்புக்குப் பின்னால் மறைந்திருந்து இலக்குகளை ஸ்கேன் செய்து அடையாளம் கண்டு, தேவைப்படும்போது மட்டும் வெளியில் தோன்றி தாக்குதலை நடத்த முடியும். வான்வழி அச்சுறுத்தல்களுக்கு, பதிலடி கொடுக்க வான்-வான் ஸ்டிங்கர் ஏவுகணைகளையும் சுமந்து செல்வதால், பீரங்கிகளுக்கு மட்டுமில்லாமல் எதிரியின் ஹெலிகாப்டர்கள் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு ஒரு மரண அச்சுறுத்தலாக இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் உள்ளது.
மேலும், அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், தாக்குதல்களை ஒருங்கிணைத்தல், தரவுகளை உடனுக்குடன் பகிர்வது போன்ற திறன்களும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் உள்ளன. இதன் மூலம் ராணுவத் தளபதிகளுக்குப் போர்முனை குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கும். இந்திய ராணுவத்தின் வான்படையை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு, 22 Apache ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்கா மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் செய்திருந்தது. 2020ஆம் ஆண்டில், இந்திய ராணுவம் மேலும் ஆறு Apache ஹெலிகாப்டர்களை வாங்க 600 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உலகளாவிய விநியோகச் சங்கிலி சிக்கல்கள் மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாகப் புதிய ஹெலிகாப்டர்களின் விநியோகம் தாமதமானது.
கடந்த ஜூலை 21 ஆம் தேதி, அமெரிக்காவிலிருந்து மூன்று AH-64E Apache ரக ஹெலிகாப்டர்கள் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. இந்த ஹெலிகாப்டர்களின் பெரும்பாலான உதிரி பாகங்கள் ஹைதராபாத்தில் உள்ள டாடா-போயிங் கூட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை ஏற்கனவே இரண்டு படைப்பிரிவு அப்பாச்சி ஹெலிகாப்டர்களைப் பதான்கோட் மற்றும் ஜோர்காட்டில் இயக்கி வருகிறது.
இவை முறையே சீனாவுடனான இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளை பாதுகாக்கின்றன. Apache தவிர, Rudra மற்றும் Dhruv போன்ற பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்திடம் உள்ளது. Rudra, மற்றும் Dhruv ஆயுதம் தாங்கிய ஹெலிகாப்டர்களாகும். பீரங்கிகள் எதிர்ப்பு மற்றும் நெருங்கிய வான்வழி தாக்குதலுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
மேலும் இந்திய இராணுவத்தில் Cheetah மற்றும் Chetak போன்ற இலகுரக ஹெலிகாப்டர்கள் மருத்துவம் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் Apache ரக ஹெலிகாப்டர்கள் இல்லாத நிலையில், இந்தியாவிடம் Apache ஹெலிகாப்டர்கள் இருப்பது, அனைத்து நவீனப் போர் சூழலையும் இந்தியா வலிமையுடன் எதிர்கொண்டு வெல்லும் என்று சர்வதேச பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
















