இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தியது போன்று, இந்தியாவிலும் வெடிமருந்து நிரப்பிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்த மருத்துவ பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை புகழ்ந்தும், ஆபரேஷன் சிந்தூருக்குப் பழிவாங்குவதாக சபதம் செய்தும் சுவரொட்டிகள் ஜம்மு காஷ்மீரில் ஓட்டப் பட்டிருந்தன. இது தொடர்பாக ஷோபியனைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு மௌல்வி இர்பான் அகமது வாகே மற்றும் ஜமீர் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மௌல்வி இர்பான் அகமது வாகே தான், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ‘பயங்கரவாத டாக்டர்களுக்கும், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கும் இடையேயான தொடர்பாக இருந்துள்ளார்.
மேலும் பயங்கரவாத டாக்டர்களுக்குத் தாக்குதல் நடத்துவதற்கான துப்பாக்கிகளை வழங்கியுள்ளார். இந்தியாவுக்கு எதிராக டாக்டர்களை ஒருங்கிணைத்த இஸ்லாமிய மதகுரு மௌல்வி இர்பான் அகமது வாகேவின் முதல் பயங்கரவாத டாக்டர் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஜாமில் ஷகீல் தான். 2023ம் ஆண்டில் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் முஜாமில் ஷகீலை, வாகே சந்தித்துள்ளார்.
டாக்டர் அடில் அகமது ராதர், டாக்டர் சயீத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது ஆகியோரை பயங்கரவாதிகளாக மாற்ற டாக்டர் ஷகீல், வாகேவுக்கு உதவியுள்ளார். கடந்த நவம்பர் 5ம் தேதி, உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூரில் உள்ள அனந்த்நாக் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர் அடில் அகமது ராதர் கைது செய்யப்பட்டார். அவரது லாக்கரில் இருந்து ஒரு AK-56 ரக துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் முஜாமில் ஷகீல் கைது செய்யப்பட்டார். ஃபரிதாபாத்தின் தௌஜ் பகுதியில் அவரது வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 3,000 கிலோ எடையுள்ள அம்மோனியம் நைட்ரேட் வெடி பொருள் கைப்பற்றப் பட்டது. டெல்லி செங்கோட்டையில் வெடித்த காரில் பயன்படுத்தியதும் அமோனியம் நைட்ரேட் தான் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோவில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஷஹினா சயீத், பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பெண்கள் பிரிவுக்கு ஆள்சேர்ப்பு மற்றும் நிதி திரட்டல் ஆகிய பணிகளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்த அமைப்பு மூளை சலவை செய்து பெண்களையும் பயங்கரவாதிகளாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. இதற்காக, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரின் சகோதரிகள் சாடியா அசார் மற்றும் சமைரா அசார் ஆன்லைன் வகுப்புகளை தினசரி எடுத்து வந்துள்ளனர்.
செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதலுக்கு 20 லட்சம் ரூபாய் வரைக்கும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பிடமிருந்து டாக்டர் ஷஹினா சயீத், ‘நிதி’யாகப் பெற்றதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் டாக்டர் ஷஹினா சயீத் தனது பெயரில் வாங்கிய மாருதி பிரெஸ்ஸா காரும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. குண்டு வெடிப்புக்குப் பிறகு பயங்கரவாதிகள் தப்பித்துச் செல்வதற்காக இந்த புதிய காரை டாக்டர் ஷஹினா சயீத் வாங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் இஸ்லாமிய மதகுரு வாகே, உத்தர பிரதேச கல்லூரியில் பணிபுரிந்த டாக்டர் ஃபரூக் அகமது தாரையும் பயங்கரவாத டாக்டராக மாற்றியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு உதவிய காஷ்மீரின் சம்பூராவில் வசிக்கும் அமீர் ரஷீத் அலி மற்றும் ஜசீர் பிலால் வானி என்ற டேனிஷ் ஆகியோரை NIA கைது செய்துள்ளது. டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் அமீர் ரஷீத் அலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காரையே வெடிகுண்டாக மாற்றி வழங்குவதற்காகவே அவர் டெல்லிக்கு வந்ததாகவும் NIA விசாரணையில் கூறப்பட்டுள்ளது. ட்ரோன்களை மாற்றியமைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது டேனிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லியை நடுங்கவைத்த கார் குண்டுவெடிப்புக்கு முன்னதாக, ராக்கெட்டுகளை வீசி செங்கோட்டையை தகர்க்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேமராக்கள் பொருத்தப்பட்டு அதிக எடையுள்ள வெடிகுண்டுகளைச் சுமந்து செல்லக் கூடிய சக்திவாய்ந்த ட்ரோன்களைத் தயாரிக்கும் பணியில் டேனிஷ் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ட்ரோன் மூலம் பயங்கரவாத தாக்குதல் இதுவரை நடந்ததில்லை. மத்திய அரசின் அதிவேக கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கையால், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்துவது போலவே, இந்தியாவிலும் வெடிமருந்து நிரப்பிய ட்ரோன்கள் மூலம் தாக்குதல்களை நடத்த பயங்கரவாத டாக்டர்கள் போட்ட திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாத டாக்டர்களின் டைரி மற்றும் செல்போன்களை ஆய்வு செய்ததில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பயங்கரவாத டாக்டர்களுக்கும் பாகிஸ்தானில் இயங்கும் இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
















