பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் உணவு சாப்பிட்ட 9 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 15 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், வழக்கம்போல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
உணவு சாப்பிட்டபோது அதில் சாக்பீஸ் துண்டு இருப்பதாக மாணவர்கள் கூறியபோதும், அதனை ஆசிரியர்கள் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.
மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள், வயிறு வலிப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட 9 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















