அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றி வைத்தார்.
ராமர் கோயில் கொடியேற்ற நிகழ்விற்காக அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
பின்னர், ராமர் கோயில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் கையில் தேசியக்கொடியை ஏந்தி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், ராமர் கோயிலில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆளுநர் ஆனந்திபென் ஆகியோர் வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் காவிக்கொடியை ஏற்றி வைத்தனர்.
22 அடி நீளம் 11 அடி அகலத்தில் முக்கோண வடிவிலான காவிக்கொடியை இருவரும் ஏற்றிவைத்தபோது கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினர்.
இதனை அடுத்து, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோருக்கு காவிக்கொடியின் மாதிரியை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நினைவு பரிசாக வழங்கினார்.
















