ராம ராஜ்ஜியத்தின் கொடி அயோத்தி கோயிலில் பறப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கட்டுமானம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்துர 191 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட சிறப்புக் கொடி ஏற்றப்பட்டது.
அயோத்தி கோயில் மூலவர் ஸ்ரீபாலராமரை பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் இணைந்து வழிபட்டபின்னர், இருவரும் கொடியை ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து, அயோத்தி கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் மத்தியில் பேசிய மோகன் பாகவத், இன்று நிறைவும் மகிழ்ச்சியும் கொடுக்கும் நாள் என்றும், இதற்காக எத்தனையோ உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அந்த ஆன்மாக்கள் அனைத்தும் இன்று நிச்சயம் சாந்தியடையும் என்றும் தெரிவித்தார்.
உலகிற்கு நிம்மதி அளித்த ராம ராஜ்ஜியத்தின் கொடி கோயிலின் உச்சியில் பறப்பதாகவும், நூற்றாண்டுப் போராட்டங்களை ஒதுக்கிவைத்துப் பார்த்தாலும், இந்த இடத்திற்கு வரத் தமக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் அவர் கூறினார்.
















