எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஏ.ஐ மூலம் இயங்கக்கூடிய, நாட்டின் முதல், இந்திரஜால் ரேஞ்சர் என்ற ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் எல்லை வழியாக, பாகிஸ்தானில் இருந்து, ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள், போதைப் பொருள் கடத்துவது அதிகரித்து வருகிறது. சட்ட விரோதமாக நுழையும் ட்ரோன்களை கண்டறிந்து, பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், நாட்டின் முதல் ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை, இந்திரஜால் ட்ரோன் டிபென்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஏ.ஐ. மூலம் இயங்கக்கூடிய இந்த வாகனத்துக்கு இந்திரஜால் ரேஞ்சர் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
பொதுவாக ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு ஓரிடத்தில் நிலையாக இருக்கும். ஆனால் இந்த ரேஞ்சர் வாகனம், அனைத்து இடங்களிலும் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாகனம் இயங்கும் போதே எதிரிகளின் ட்ரோன்களைக் கண்டறிந்து, கண்காணித்து, அவற்றை அழிக்கும் திறன் பெற்றுள்ளது.
இதில் உள்ள ஏ.ஐ. தொழில்நுட்பம் தன்னிச்சையாக அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு, இலக்குகளை உடனடியாக இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது.
எல்லை தாண்டிய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்திரஜால் ரேஞ்சர் வாகனத்தின் வரவு, நம் படைகளுக்குப் பக்க பலமாக இருக்கும் கூறப்படுகிறது.
















