விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் பள்ளிவாசலுக்கு சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவத்தில், தடயங்களை ஜமாத்தினர் அழிப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரசோழன் பகுதியை சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் நரிக்குடி ஜூம்மா பள்ளிவாசலில் அஷ்ரத் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணை அப்துல் அஜீஸ் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அப்துல் அஜீஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உரிய விசாரணை நடத்தாமல் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ரத்தக் கறைகள் உள்ளிட்ட தடயங்களை காவல்துறையினர் மற்றும் ஜமாத்தை சேர்ந்த நபர்கள் அழித்ததாகத் தெரிகிறது.
தகவலறிந்து சென்ற பெண்ணின் உறவினர்கள், பள்ளிவாசலை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரின் சமரசப் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த பெண்ணின் உறவினர், மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
















