கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20ம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் , 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிலையில், விழாவின் நிறைவு நாளில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை மத்திய அமைச்சர் எல். முருகன், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய 50 ஆண்டு சினிமா பயணம் வேகமாக ஓடிவிட்டதாகவும், சினிமாவையும், நடிப்பையும் விரும்புவதாகவும் கூறினார். மேலும், எத்தனை பிறவி எடுத்தாலும் நடிகர் ரஜினிகாந்தாக பிறக்க விரும்புவதாகவும், என்னை வாழவைக்கும் தமிழ்மக்கள், திரைத்துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
















