பகவத் கீதை தனிநபர்கள், மற்றும் நாடுகளை அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கித் தொடர்ந்து வழிநடத்தும் என்று துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெறும் சர்வதேச கீதை மஹோத்சவம் நிகழ்ச்சியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட அகில இந்திய தேவஸ்தான மாநாட்டில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசம் செய்த இடத்தில் தாம் நின்று கொண்டிருப்பதை நினைத்துப் பெருமையாக உணர்வதாகக் கூறினார்.
மேலும், அதர்மத்தின் மீதான தர்மத்தின் வெற்றியைக் குருக்ஷேத்திரம் நமக்கு நினைவுபடுத்துகிறது என்றும், அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும், இறுதியில் தர்மம்தான் வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பகவத் கீதை மத நூல் மட்டுமல்ல, நீதி, துணிச்சல் மற்றும் ஞான உணர்வுகளை வழங்கும் உலகத்திற்கான வேதம் என்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான திறவுகோல் என்றும் அவர் தெரிவித்தார்.
பகவத் கீதை மனிதகுலத்தை நல்லொழுக்கமான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை நோக்கி வழிநடத்துகிறது என்றார்.
















