விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட 15 பெரும் தொழிலதிபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. முராரிலால் மீனா கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜெயந்திலால் சந்தேசரா உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதாகவும், சட்டம் 2018இன்கீழ் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
15 பேரில் 9 பேர் பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும், இந்தப் பட்டியலில் விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்ட பெரிய தொழிலதிபர்களின் பெயர்களும் அடங்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த 15 பொருளாதார குற்றவாளிகளால் மொத்தம் 57 ஆயிரத்து 82 கோடி ரூபாய் நிதியிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தக் குற்றவாளிகளிடமிருந்து 19 ஆயிரத்து 817 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்தார்.
















