நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.
தமிழக டிஜிபி மற்றும் அரசுத் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதியன்று மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டதாகத் தமிழக டிஜிபிக்கு 232 பக்க கடிதம் எழுதியதாகவும், 36 நாட்களுக்குப் பிறகு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் 258 பக்கம் கொண்ட கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வாட்ஸ்அப் உரையாடல்களும், அதற்கான ஆவணங்களும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் உறவினர்கள் மூலமாக ஒப்பந்ததாரர்களிடம் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷன் பெற்றதாகவும், கட்சி நிதியாகவும் பணம் வசூலித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் ஆயிரத்து 20 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததற்கான நேரடி ஆதாரங்கள் இருப்பதாகவும், ஒப்பந்ததாரர்களை முன்கூட்டியே தீர்மானித்து டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழலை விசாரிக்க உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருப்பது “தெரிந்தே லஞ்சம் வசூலிப்பதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக” இருக்கும் எனவும் தமிழக காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்க வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது.
















