திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த நபரைத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்த பாமக முன்னாள் நகரச் செயலரான ராமலிங்கம் என்பவர் மதமாற்றத்தைக் கண்டித்ததால் கடந்த 2019ஆம் ஆண்டு வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.
வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணைத் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான புர்ஹானுதீன், நஃபீல் ஹாசன் உள்ளிட்ட 3 பேரைக் கடந்த வாரம் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
வழக்கில் தலைமறைவாக உள்ள 6வது குற்றவாளியான பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலரான முகமது அலி ஜின்னா குறித்து தகவல் தெரிவித்தால் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்ஐஏ அறிவித்தது.
இந்நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த முகமது அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
















