மக்களவையில் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை மாற்ற வகைசெய்யும் ‘வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்பு’ சட்ட மசோதாவை மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
இந்தப் புதிய மசோதாவின்படி, ஒரு நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்பு என்பது 125 நாள்களாக உயா்த்தப்பட உள்ளது. ஆனால், 100 சதவீதம் மத்திய அரசு நிதி அளித்து வந்த இத்திட்டத்துக்கு இனி மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி அளிக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாநில அரசுகள் மீது நிதி சுமையை ஏற்றும் வகையில் மசோதா இருப்பதாகவும், மகாத்மா காந்தி பெயர் நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மக்களவையில் கடந்த 2 நாள்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பக் கோரியும், மக்களவை சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டும், நகலை கிழித்து எறிந்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து, நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்படுவதாகச் சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
















