சபரிமலையில் தமிழகத்தின் நீலகிரியை சேர்ந்த 68 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் பக்தர்களுக்கு கட்டணமில்லா உதவி செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மண்டல மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், இயலோதோர் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் பாரம்பரிய கானக பாதைகளிலும், பம்பையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் மலையேறும் போதும் உடல் ரீதியாக பெரும் சவால்களை சந்திக்கின்றனர்.
இது போன்ற பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 68 பேர் கொண்ட குழுவினர் ஸ்ட்ரெச்சர்களுடன் சபரிமலையில் முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் சபரிமலை செல்லும் வழியில் நடக்க இயலாமல் சோர்வாக உள்ள பக்தர்களை சன்னிதானம் கொண்டு செல்வது, முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்படுபவர்களை மருத்துவ முகாம்களில் சேர்ப்பது என கட்டணமில்லா சேவையை வழங்கி வருகின்றனர்.
இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு சேவை செய்வதற்காகவே விடுப்பு எடுத்து கட்டணமில்லா சேவையை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
















