கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கொல்கத்தாவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், கோடிக்கணக்கில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கொல்கத்தாவில் மெஸ்ஸி வருகையின் போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, விழா ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தா கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்துள்ளது.
குறிப்பாக, மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரசிகர்களிடம் தலா 10 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான எந்தவித அதிகாரப்பூர்வ ரசீதுகளோ அல்லது கணக்குகளோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மைதானத்தில் 66 ஆயிரம் வரை இருக்கலாம் என்ற நிலையில் சுமார் 50 சதவீத டிக்கெட்டுகளுக்கான கணக்குகள் காட்டப்படவில்லை. மெஸ்ஸிக்கு 89 கோடி ரூபாய் ஊதியமாகவும், அரசுக்கு 11 கோடி ரூபாய் வரியாகவும் செலுத்தப்பட்டதாக சதத்ரு தத்தா தெரிவித்துள்ளார்.
ஆனால், ஸ்பான்சர்ஷிப் மற்றும் டிக்கெட் மூலம் வந்த வருமானம் இதனுடன் ஒத்துப்போகவில்லை. இதனைத் தொடர்ந்து சதத்ரு தத்தாவின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடியை முடக்கிய புலனாய்வுக் குழு, முறைகேடு தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.
















