மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் டிட்வா புயல் காரணமாகப் பெய்த கன மழையால் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், விவசாயிகளுக்கு இன்னும் பயிர் இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவே தாமதத்திற்கு காரணம் எனவும் நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் பெருமளவு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது என்றும், சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளனர்.
இதேநிலை தொடர்ந்தால், ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும், நிலைமையைச் சமாளித்து, விவசாயிகளுக்குப் பயிர் சேத இழப்பீடு வழங்க அதிகாரிகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















