வங்கதேசத்தில் நிலவும் பதற்றம், முற்றிலும் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.
வங்கதேசத்தில் நிலவும் வன்முறை குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பேட்டி அளித்துள்ளார்.
அதில், வங்கதேசத்தில் இந்தியா மீதான விரோதம் பயங்கரவாதிகளால் வளர்க்கப்படுகிறது என்றும், தனது குடும்பத்தைத் தாக்கியவர்கள்தான் இந்திய தூதரகத்தையும் தாக்கினர் எனவும் குற்றம்சாட்டினார்.
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சியில் பயங்கரவாதம் பெருகியுள்ளது எனக்கூறியுள்ள அவர், சட்டம்-ஒழுங்கு சரியில்லாததால் வங்கதேசத்தின் மீதான நம்பகத்தன்மை சர்வதேச அரங்கில் சரிந்து வருகிறது எனத் தெரிவித்தார்.
முகமது யூனுஸ் பயங்கரவாதிகளை அமைச்சரவை பதவிகளில் அமர்த்தியுள்ளார் என்றும், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை ஆதரிக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ்க்கு ஒரு சிக்கலான நாட்டை நிர்வகிப்பதில் அனுபவம் இல்லை என்றும், முகமது யூனுஸ் ஒரு அரசியல்வாதி அல்ல எனவும் கூறியுள்ளார். மேலும், இந்தியாவுடனான உறவில் ஏற்பட்ட விரிசலுக்கு இடைக்கால அரசாங்கமே காரணம் எனவும் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியுள்ளார்.
















