ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 4ஆம் நாள் உற்சவத்தில், நம்பெருமாள் அரைக்கொண்டை சாற்றியும், ஆபரணங்கள் அணிந்து கொண்டும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கடந்த 20ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவம் வெகுவிமரிசையாகத் தொடங்கியது.
நாள்தோறும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பகல் பத்து 4ஆம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றியும், தங்க வைர ஆபரணங்கள் அணிந்து கொண்டும் சிறப்பு அலங்காரத்தில் அர்ஜீன மண்டபத்தில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, நம்பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















