திருப்பரங்குன்றம் மலைக்கு அசைவ உணவு எடுத்துச் செல்ல முயன்ற இஸ்லாமிய தம்பதியினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற கந்தூரி விழாவின்போது ஆடு கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை பகுதியில் ஆடு கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான சந்தனக்கூடு விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனிடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கடந்த மூன்றாம் தேதி முதல், மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா, காசி விசுவநாதர் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், கடந்த 22ஆம் தேதி அனுமதி அளித்தனர்.
இதனையடுத்து, நாள்தோறும் விசுவநாதர் கோவிலுக்கும், சிக்கந்தர் தர்காவிற்கும் இரு மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தீவிர சோதனைக்குப்பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அசைவ உணவுடன் மலைக்கு செல்ல முயன்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்கள் உணவை அருகில் உள்ள வீட்டில் வைத்துவிட்டு தர்காவிற்கு சென்றுள்ளனர்.
















