ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆகம விதிப்படி சிவபெருமானுக்கும், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, கோயிலில் குவிந்திருந்த பக்தர்கள் ராஜ கோபுரம் மற்றும் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
3 மணி நேரம் நிண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோயில் முன்பு திரளான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். சேலம் ராஜகணபதி கோயில் இரவு நடை சாத்தப்பட்டாலும், ராஜகணபதி வெளியே தெரியும்படி கிரீல்கேட்டு பொருத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு முன்பு திரளான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இதேபோன்று, சேலம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலிலும் வியாபாரிகள். பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
















