மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் முன் ஜாமின் கோரிய காவல் துணை கண்காணிப்பாளரின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அஜித்குமார் கொலை வழக்கில் மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, வழக்கில் முன் ஜாமின் கோரி டிஎஸ்பி சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், டிஎஸ்பிக்கு முன் ஜாமின் வழங்கக் கூடாது என்றும்,
அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது உள்ளது எனவும் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதி, டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில், முன்ஜாமின் மனுவை திரும்பப் பெற்று கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டார்.
















