மெரினா கடற்கரையில் மோதி கொண்ட போக்குவரத்து காவலர்களை சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வரும் சண்முகசுந்தரம், மெரினா பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
அப்போது ஒரு இளைஞரின் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லாத காரணத்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்ததாக சொல்லப்படுகிறது.
இதனை அறிந்த திருவல்லிக்கேணியில் பணியாற்றும் மற்றொரு போக்குவரத்து காவலரான ராகவன் காவலர் உடை இல்லாமல், லியோ என்ற மற்றொரு போக்குவரத்து காவலருடன் வந்துள்ளார்.
அவர்கள், இருவரும் இன்சூரன்ஸ் இல்லாததற்காக அபராதம் விதிக்க முடியாது என்று தலைமை காவலர் சண்முகசுந்தரத்திடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் காவலர் ராகவன் மற்றும் சண்முகம்சுந்தரம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது சண்முகசுந்தரம், ராகவனை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சூழலில், போக்குவரத்து காவலர் ராகவன் மற்றும் லியோவை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், தலைமை காவலர் சண்முக சுந்தரம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
















