திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைந்தது
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், டிசம்பர் மாதம் 19ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. அன்று முதல் அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து உற்சவம் நடந்தது. அடுத்து, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளன்று, டிசம்பர் 30ஆம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
ராப்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளன்று தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தார்.
இதனைதொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க, நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். பின், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைதொடர்ந்து நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்ததுடன், வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
















