மெட்ரோ ரயில்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி பெட்டிகள் ஒதுக்கக் கோரிய பொதுநல வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒவ்வொரு பெட்டியிலும் மொத்தமுள்ள ஐம்பது இருக்கைகளில் 14 இருக்கைகள் இதற்கென ஒதுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது.
அதற்கு, இருக்கைகள் இருந்தாலும், அது முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப் பெட்டி ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கவும், மெட்ரோ ரயில்களில் திடீர் ஆய்வு செய்து, இருக்கைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டு, இருக்கைகளை முறையாகப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை முப்பது நாட்களுக்குள் வகுக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
















