தமிழகத்தில் அதிகரிக்கும் சட்டவிரோதச் செயல்களால் கேள்விக்குறியாகும் பொதுமக்களின் பாதுகாப்பு – அண்டை நாடுகளுக்குக் கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்
சேலம் மாவட்டம் மேச்சேரி பேருந்து நிலையம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக திமுக நிர்வாகி ஒருவர் கைதாகியிருக்கும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் ஆளுங்கட்சி ஆதரவோடு நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையும், எந்தவித தடங்கலுமின்றி தமிழகத்திலிருந்து அண்டை நாடுகளுக்குக் கடத்தும் அளவிற்கான கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கமும் தான் திமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனையாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் அரங்கேறும் குற்றச்சம்பவங்களிலும், சட்டவிரோதச் செயல்களிலும் ஏதேனும் ஒருவகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பதும், அவர்களின் மீது பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை தயங்குவதும் ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அடியோடு சிதைக்கச் செய்திருக்கிறது.
எனவே, தமிழகத்திற்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் எப்படி வருகிறது? அண்டை நாடுகளுக்குக் கடத்தப்படுவதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? யார்? என்பதைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்துவதோடு, எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்திலாவது தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கும் சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் கூறியுள்ளார்!
















