கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண் விவசாயிகள் ஒன்றிணைந்து ‘பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்’ என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த நிறுவனத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 360 பெண் விவசாயிகளும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 400 பெண் விவசாயிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்கள், மலைப்பகுதியில் விளையும் திணை, சாமை, குதிரை வாலி உள்ளிட்ட சிறுதானியங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மலைவாழ் பெண்களின் பொருளாதார தற்சார்புக்கு மிகச்சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
இந்நிலையில், ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சிறுதானிய உற்பத்தியில் சாதனை படைக்கும் பெரியகல்வராயன் சிறுதானிய மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளின் சாதனையை குறிப்பிட்டு பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான பெண்கள் நேரலையில் கண்டு ரசித்தனர். இதனையடுத்து, நாட்டின் கடைக்கோடியில், மலைப்பகுதியில் வசிக்கும் தங்களைப் போன்ற எளிய விவசாயிகளைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
















