இந்திய திருநாட்டின் 77ஆவது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த தினத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் 77ம் ஆண்டு குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்துகிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்படும்.
இதையடுத்து கடமைப் பாதையில் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் குடியரசு தின விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதால் டெல்லி முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், எல்லைப் பகுதிகளில் விடிய விடிய வாகன சோதனையும் நடைபெற்றது….
















