விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்ளிட்ட 5 பேர் சென்ற விமானம் தரையிறங்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஐந்து பேரின் உடல்களும் அஹில்யாபாய் ஹோல்கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அஜித் பவாரின் உடல் காட்டேவாடியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்ட நிலையில், அஜித் பவாரின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மத்திய அமைச்சர் அமித்ஷா, கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அதேபோல, சித்தப்பாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
வித்யா பிரதிஸ்டான் மைதானத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், அஜித் பவாரின் உடலுக்கு அவரது மகன்கள் தீமுட்டி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
















