அமைச்சர் மூர்த்தியின் தொகுதியான தீர்த்தகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர் தீர்த்தகாடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் அனுமந்த பட்டா பெற்று பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
ஆனால், தீர்த்தகாடு பகுதியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை எனக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
தீர்த்தகாடு பகுதியில் மின்சாரம் இல்லாததால் விளக்கு வெளிச்சத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருவதாக பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தீர்த்தகாடு பகுதியை அமைச்சர் மூர்த்தி இதுவரை பார்வையிடவில்லை எனவும் கூறினர். இ-பட்டா வழங்கிய பின்பும் மின்சாரம் வழங்காத அரசு எதற்கு என கேள்வி எழுப்பிய பெண்கள், தீர்த்தகாடு பகுதிக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















